சென்னை: செஸ் உலகக் கோப்பை போட்டி வரும் அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 27 வரை இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தது. ஆனால் போட்டி எந்த நகரத்தில் நடத்தப்படும் என்பது தெரிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் செஸ் உலகக் கோப்பை தொடர் கோவாவில் வரும் அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 27 வரை நடைபெறும் என ஃபிடே அறிவித்துள்ளது.
இந்தத் தொடரில் 90-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 206 வீரர்கள் கலந்துகொண்டு பட்டம் வெல்ல மோத உள்ளனர். முதல் 3 இடங்களை பிடிப்பவர்கள் 2026-ம் ஆண்டு நடைபெறும் ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் விளையாட தகுதிபெறுவார். கேண்டிடேட்ஸ் தொடரின் வெற்றியாளர், தற்போது உலக சாம்பியனாக உள்ள இந்தியாவின் டி.குகேஷுடன் பலப்பரீட்சை நடத்துவார்.