சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 30 – 36 டிகிரி செல்சியஸ் மற்றும் தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 31 – 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் – மாலத்தீவு வரை ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் அடுத்த 6 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இன்று முதல் 6ம் தேதி வரை 4 நாட்கள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 – 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
* 124 ஆண்டுகளுக்கு பின் பிப்ரவரியில் உச்சம் தொட்ட வெயிலின் தாக்கம்
இந்தியாவில் கடந்த மாதம் இயல்பை விட வெப்பம் அதிகமாக பதிவாகி உள்ளது. இதற்கு முன் கடந்த 1901ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 22 டிகிரி செல்சியஸ் என்று இந்தியாவில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகிய நிலையில் 124 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு பிப்ரவரியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் சராசரியாக 22.04 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது இது இயல்பை விட 1.34 டிகிரி அதிகம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.