சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஞானசேகரனின் கூட்டாளி கைது செய்யப்பட்டார். மேலும், 2 கிலோ வெள்ளி மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர், பாலியல் குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி பல்வேறு கொள்ளை வழக்கிலும் கைது செய்யபட்டு சிறை சென்றவர் என தெரியவந்தது. கடந்த 2019ம் ஆண்டு நீலாங்கரை, கானத்தூர் பகுதிகளில் வீடுகளில் ஞானசேகரன் கொள்ளையடித்து போலீசில் சிக்கி சிறை சென்றுள்ளார். இதையடுத்து குற்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என கூறி பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார். ஆனால் பிரியாணி கடை நடத்தி கொண்டே இரவு நேரங்களில் பள்ளிகரணை பகுதிக்கு காரில் சென்று சிசிடிவி கேமிரா இல்லாத வீடுகளை நோட்டமிட்டு 7 வீடுகளில் வெள்ளி பொருட்கள், 200 சவரனுக்கும் மேற்பட்ட நகைகளை கொள்ளை அடித்தது தெரியவந்தது.
இந்நிலையில், ஞானசேகரனின் செல்போனுக்கு பொள்ளாச்சியை சேர்ந்த முரளிதரன் (31) என்பவர் அடிக்கடி பேசியுள்ளார். அதனால் போலீசார் நேற்று முரளிதரனை கைது செய்து விசாரணை செய்தனர். இதில், முரளிதரன் பிஎஸ்சி இயற்பியல் படித்து முடித்துவிட்டு பின்னர் எம்பிஏ படிப்பில் சேர்ந்து பாதியில் படிப்பை நிறுத்தி உள்ளார். சென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றியும் வந்துள்ளார். 8 ஆண்டுகளுக்கு முன் ஒரு மோசடி வழக்கில் செம்மஞ்சேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அந்த சமயத்தில் ஞானசேகரனும் திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்துள்ளார். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளிவந்த பின்பும் நட்பு தொடர்ந்துள்ளது. பின்னர் முரளிதரன் ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டு பணத்தை இழந்து கடனாளியாகி உள்ளார். அப்போது சிறை நண்பர் ஞானசேகரனை சந்தித்து பேசிவந்துள்ளார். இதையடுத்து 2019ம் ஆண்டு மதுராந்தகத்தில் ஞானசேகரனுடன் சேர்ந்து ஆள் கடத்தலில் ஈடுபட்டதால் இருவரும் கைதாகி உள்ளனர். பின்னர் 2022ல் பள்ளிக்கரணையில் இருவரும் சேர்ந்து 2 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இருவரும் சேர்ந்து திருவான்மியூரில் ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதில் நினைத்தபடி சக்சஸ் ஆகவில்லையாம். அதன் பிறகு முரளிதரன் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும்போது உடன் பணியாற்றிய பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
தற்போது காதல் மனைவிதான் முரளி வாங்கிய கடன்களை அடைத்து வருகிறாராம். தற்போது முரளி பஸ் கிளீனராக பணியாற்று வருவது தெரியவந்தது. இதையடுத்து முரளி கொடுத்த தகவலின் பேரில் 2 கிலோ வெள்ளி பொருட்கள், பெருங்களத்தூர் பாலத்தின் கீழ் நிறுத்தி இருந்த ஞானசேகரனின் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
The post அண்ணா பல்கலை விவகாரம் ஞானசேகரனின் கூட்டாளி கைது: 2 கிலோ வெள்ளி பைக் பறிமுதல் appeared first on Dinakaran.