சென்னை: அதிமுக – பாஜக கூட்டணியை பிளவுபடுத்த யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கூட்டணி ஆட்சி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆகிய இருவரும் எடுக்கும் முடிவே இறுதியானது. தேவையற்ற சந்தேகங்களை எழுப்பி, அதிமுக – பாஜக கூட்டணியை பிளவுபடுத்த யாரும் முயற்சிக்க வேண்டாம். திமுக ஆட்சியை அகற்றுவதே எங்கள் இலக்கு. தமிழக மக்கள் நலன் கருதி, எல்லோரும் பாஜகவுடன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.