சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறார். மாநில உரிமைகளை பறிக்கும் அல்லது மாநில கொள்கைக்கு எதிரான முக்கிய பிரச்சினைகளின் போதும் அதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வது தொடர்பாக விவாதிப்பதற்காக மாநிலத்தின் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினருக்கு அரசு சார்பில் அழைப்பு விடுத்து, அனைத்து கட்சி கூட்டம் நடத்தி விவாதித்து அவர்களிடம் ஆலோசனைகளை கேட்டு பெறுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு எதிர்கொண்டு வரும் தொகுதி மறு வரையறை மற்றும் புதிய கல்வி கொள்கை பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு, அங்கீகரிக்கப்பட்ட 40 கட்சிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
அரசியல் கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக ஆலோசித்து வரும் நிலையில், மாநிலத்தின் முக்கிய பிரச்சினை தொடர்பாக விவாதிக்கப்பட உள்ள நிலையில், மாநிலத்தின் உரிமைக்காக, அரசியல் கட்சிகள் கௌரவம் பார்க்காமல் இதில் பங்கேற்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று பேசினார். இந்த நிலையில் பிரபல நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இதில் கலந்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளது. கட்சியின் சார்பாக கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இதில் பங்கேற்க உள்ளார்.
The post அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்! appeared first on Dinakaran.