மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக முன்னோடிகளை எசகுபிசகாக விமர்சனம் செய்த அப்போதைய பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக வெகுண்டெழுந்தது அதிமுக. அதையே சாக்காகச் சொல்லி கூட்டணியை விட்டு விலகி சூடும்பட்டது அதிமுக. அதேபோல் இப்போது பாஜக தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து என்டிஏ கூட்டணியை விட்டு விலகி இருக்கிறார் டி.டி.வி.தினகரன்.
“அண்ணாமலை தான் என்னை என்டிஏ கூட்டணியில் சேர்த்தார். அவர் எங்களுக்கு உரிய மரியாதை கொடுத்தார். ஆனால், அவருக்கு இருக்கும் பக்குவம் நயினார் நாகேந்திரனுக்கு இல்லை. இபிஎஸ் மட்டும் இருந்தால் போதும் என நினைக்கும் நயினாருக்கு தமிழகத்தின் யதார்த்த நிலை தெரியவில்லை. நாங்கள் என்டிஏ கூட்டணியை விட்டு விலகக் காரணம் நயினார் நாகேந்திரன் தான். அண்ணாமலை தலைவராக இருந்திருந்தால் இது நடந்திருக்காது” என்று பொட்டிலடித்தாற்போல் சொல்லிவிட்டார் தினகரன்.