சென்னை: டாஸ்மாக் பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கேடயமாக்கி அமலாக்கத்துறையின் விசாரணையை முடக்க தமிழக அரசு முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது என தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்துள்ளனர்.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை தொடர் சோதனை நடத்தினர். இந்த சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என அறிவுறுத்தக் கோரியும் டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.