அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கும் நிலையில், அந்நாட்டுக்குப் பிரதமர் மோடி மேற்கொண்ட இரண்டு நாள் பயணம் பல முக்கிய நகர்வுகளுக்கு வழிவகுத்திருக்கிறது. எரிசக்தி, அணுசக்தி ஒத்துழைப்பு, பாதுகாப்பு எனப் பல்வேறு விவகாரங்களில் இரு தலைவர்களுக்கும் இடையே ஆக்கபூர்வமான உரையாடல் நிகழ்ந்தது.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க டிரம்ப் ஒப்புக்கொண்டது இந்தப் பயணத்தின் மைல்கல். எனினும், வரி விதிப்பு முதல் சட்டவிரோதக் குடியேறிகள் வரை பல்வேறு விவகாரங்களில் டிரம்ப் காட்டிய கெடுபிடியை முன்னிறுத்தி, அதை மோடிக்கு எதிரான விமர்சனமாக மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன.