மும்பை: இந்திய டி20 அணியில் மீண்டும் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ஜிதேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாளை (ஆக.19) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வுக்குழு ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்து அறிவிக்க உள்ளது.
ஸ்ரேயஸ் மற்றும் ஜிதேஷ் என இருவரும் ஐபிஎல் 2025 சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்திய டி20 அணியில் ஸ்ரேயஸ் ஐயர் கடைசியாக கடந்த 2023 டிசம்பரில் விளையாடி இருந்தார். ஜிதேஷ் சர்மா கடந்த 2024 ஜனவரியில் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடினார். கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதல் இருவரும் இந்திய டி20 அணியில் விளையாடும் வாய்ப்பினை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பயிற்சியின் கீழ் 15 டி20 போட்டிகளில் 13 வெற்றிகளை இந்தியா பெற்றுள்ளது.