சென்னை: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது முப்படைகளுக்கு மத்திய அரசு முழு சுதந்திரம் அளித்ததால்தான் களத்தில் உத்வேகத்துடன் செயல்பட முடிந்தது என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்தார்.
சென்னை ஐஐடியில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மையமான ‘அக்னிஷோத்’ தொடக்க நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. ராணுவ தளபதி உபேந்திர திவேதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மையத்தை தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அடுத்த நாளான 23-ம் தேதி சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. அதில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படை தளபதிகள் பங்கேற்றோம். பதிலடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் அனைவரும் தெளிவாக இருந்தோம். என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க அரசிடம் இருந்து முழு சுதந்திரம் எங்களுக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் முழுமையான நம்பிக்கை, அரசியல் தெளிவு கிடைத்ததால், ராணுவ தளபதிகள் களத்தில் விருப்பப்படி செயல்பட முடிந்தது.