நவ்சாரி: பெண்களின் உரிமைகளுக்கு எங்கள் அரசு அதிக முன்னுரிமை அளித்துள்ளது என தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அனைத்துவித பயம் மற்றும் சந்தேகங்களைத் தாண்டி பெண் சக்தி உயர்ந்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த பத்து ஆண்டுகளில் அரசு, பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் நவ்சாரியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 8) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், "மகளிர் தினமான இன்றைய நாள் பெண்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகா கும்பமேளாவில் கங்கை அன்னையின் ஆசிர்வாதம் எனக்கு கிடைத்தது. இன்று பெண் சக்தியின் மகா கும்பமேளாவில் எனக்கு ஆசிர்வாதம் கிடைத்துள்ளது. பணத்தின் அடிப்படையில் அல்லாமல், கோடிக்கணக்கான தாய்மார்கள், சகோதரிகள், மகள்களின் ஆசீர்வாதங்களால் உலகின் பெரிய பணக்காரராக என்னைக் கருதுகிறேன். இந்த ஆசிர்வாதங்கள் எனது மிகப் பெரிய பலம், மூலதனம், பாதுகாப்பு கேடயம்.