1967 முதல் 1974-ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஆடிய சையத் அபிட் அலி காலமானார். அவருக்கு வயது 83. இவர் கலிபோர்னியாவில் இயற்கை எய்தினார். மித வேகப்பந்து வீச்சாளர் என்றாலும் பீல்டிங்கில் உயர் தரநிலையையும் உடல் தகுதியில் உச்சபட்ச தரநிலையையும் அப்போதே பரமரித்தவர் அபிட் அலி. ரன்களை ஓடி எடுப்பதில் லைட்னிங் ஸ்பீட் என்பார்களே அந்த வகையில் அந்தக் கால ஜாண்ட்டி ரோட்ஸ் என்றே இவரை வர்ணிக்கலாம்.
அபிட் அலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப் பெரிய தருணம் 1971-ல் அஜித் வடேகர் தலைமை இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை வென்ற போது நிகழ்ந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 355 ரன்களை எடுக்க இந்திய அணி 284 ரன்களையே எடுக்க முடிந்தது. அதில் அபிட் அலி 8-ம் நிலையில் இறங்கி 26 ரன்களை அடித்து பங்களிப்புச் செய்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து சந்திரசேகரின் மாய சுழலுக்குள் சிக்கி 101 ரன்களுக்குச் சுருள இந்திய வெற்றிக்குத் தேவை 173 ரன்கள் அப்போது 8-ம் நிலையில் இறங்கிய அபிட் அலி ஸ்கொயர் கட் செய்து வெற்றி ரன்களை எடுத்தார்.