நெல்லை: இருட்டுக்கடையை வரதட்சணையாக கணவர் வீட்டார் கேட்கின்றனர் என்று புதுமணப் பெண் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். நெல்லை டவுனில் ‘இருட்டுக்கடை’ என்ற பெயரில் உலகப் பிரசித்திபெற்ற அல்வா கடையை நடத்தி வரும் ஹரிசிங், கவிதா தம்பதியின் மகள் ஸ்ரீகனிஷ்கா. இவர், வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் கொலை மிரட்டல் விடுப்பதாக நெல்லை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்திருந்தார்.
இதுகுறித்து கவிதா ஹரிசிங் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: எனது மகள் ஸ்ரீகனிஷ்காவுக்கும், கோவையைச் சேர்ந்த பல்ராம்சிங் என்பவருக்கும் பிப்.2-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணமாகி ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், என் மகளை வரதட்சணை கேட்டு அவரது கணவர் கொடுமைப்படுத்தி இருக்கிறார். அவரது குடும்பத்தினரும் என் மகளிடம் கூடுதல் வரதட்சணை வேண்டும் என்றும், ரூ.1.5 கோடி மதிப்புள்ள கார் வேண்டுமென்றும் கேட்டு துன்புறுத்தியுள்ளனர். அவர்கள் கேட்ட காருக்கு நாங்களும் புக் செய்து வைத்திருந்தோம்.