மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான இளம்பெண் பரினிதா ஜெயின், விதிஷா மாவட்டத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியொன்றில் நடனமாடிக் கொண்டிருந்தபோது, மேடையிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பெண்ணின் 12 வயது தம்பியும் சமீபத்தில் இதயக் கோளாறால் உயிரிழந்திருப்பது மேலும் திகைப்பூட்டும் தகவலாக அமைந்துள்ளது.
அதேபோன்று, சில தினங்களுக்கு முன் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நண்பர்கள் கிரிக்கெட்டில் வெற்றிபெற்றதை கொண்டாட நடனமாடிய 25 வயது இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். முன்பெல்லாம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இதயக் கோளாறு பாதிப்புகள் இருந்தநிலையில், சமீபகாலமாக 20, 30-களில் உள்ள இளம் பருவத்தினர் பலர் இதயக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் விவாதப் பொருளாக மாறியுள்ளது.