டெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் அணுகுண்டு வீசினால், இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு வீசும் என்று ஈரான் ராணுவ அதிகாரி தெரிவித்தார். அப்படி எந்த உறுதியும் அளிக்கவில்லை என்று பாகிஸ்தான் அரசு உடனடியாக இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
‘ஈரானின் அணுசக்தி திட்டம் ஆபத்தானது. அது இஸ்ரேலுக்கு மட்டுமன்றி உலக நாடுகளுக்கும் அச்சுறுத்தலானது’ என்று கூறி, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஈரான் இஸ்லாமிய புரட்சி படை மூத்த அதிகாரியும், ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினருமான ஜெனரல் மோசென் ரீஸி, ஈரான் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது: எங்களுக்கு எதிராக இஸ்ரேல் அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தினால், பதிலடியாக இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு வீசும். ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் எங்களுக்கு உறுதி அளித்துள்ளது. ஈரானுக்கு பக்கபலமாக இருப்போம். முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றுசேர வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது. ஈரானிடம் ரகசிய வலிமை உள்ளது. அதை இன்னும் உலகத்துக்கு வெளிப்படுத்தவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.