மக்களைத் தேடி அரசு என்ற நோக்கில் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ முகாம்களை தமிழகம் முழுக்க நடத்திக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. இந்த முகாம்கள் மூலம் நகர் பகுதிகளில் 13 துறைகள் சார்ந்த 43 சேவைகளும், கிராமப் பகுதிகளில் 15 துறைகள் சார்ந்த 45 சேவைகளும் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.
45 நாட்களில் மனுக்களுக்கு தீர்வு என அறிவிக்கப்பட்டிருப்பதால் அனைத்து இடங்களிலுமே இந்த முகாம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் நவம்பர் வரைக்கும் இப்படி 10 ஆயிரம் முகாம்களை நடத்தப் போவதாகச் சொல்லி இருக்கும் அரசு, அதற்கான நிதியை போதிய அளவில் ஒதுக்காததால் அல்லாடிக் கொண்டிருப்பதாக உள்ளாட்சி மற்றும் வருவாய்த்துறையினர் புலம்பித் தவிக்கிறார்கள்.