சென்னை: ஒவ்வொரு குடும்பத்துக்கான உணவு பாதுகாப்பை கூட்டுறவுத் துறை உறுதி செய்வதாக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு குடும்பத்தில் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்ற 11.70 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.4,904 கோடி அளவுக்குத் தள்ளுபடிச் சான்றிதழுடன், அவர்கள் அடமானம் வைத்த நகைகளும் திருப்பி வழங்கப்பட்டன.
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்களில் ரூ.2,118.80 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு 1 லட்சத்து 1,963 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 10 லட்சத்து 56,816 பெண்கள் பயன்பெற்றனர். பயிர்க் கடன்களை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லாப் பயிர்கடன்களாக 66 லட்சத்து 24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340.60 கோடி வழங்கப்பட்டுள்ளது.