புதுடெல்லி: இளம் வயதில் தலை முடி கொட்டுவதால், தம்மை அழகாக்கிக் கொள்ள ஆண், பெண் இருபாலரும் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்கின்றனர். இதற்காக உ.பி.யின் கான்பூரில் டாக்டர் அனுஷ்கா திவாரி நடத்தி வந்த மருத்துவமனைக்கு இளம் பொறியாளர்கள் 2 பேர் சிகிச்சைக்காக வந்துள்ளனர்.
அவர்களில் உ.பி.யின் பரூக்காபாத்தை சேர்ந்த பொறியாளர் மயங்க் கட்டியார் என்பவர் கடந்த நவம்பர் 18-ல் அனுஷ்கா மருத்துவமனையில் முடி மாற்று அறுவை சிகிச்சை பெற்றார். ஆனால் 24 மணி நேரத்துக்கு பிறகு முகம் வீங்கி, மயங்கின் உடல்நிலை மோசமடைந்தது. மறுநாள் 19-ல் மயங்க் உயிரிழந்தார். அதேபோல் கான்பூர் பவர் ஹவுஸ் பகுதியை சேர்ந்த பொறியாளர் வினீத் துபேவும், முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு மார்ச் 15-ல் உயிரிழந்துள்ளார்.