சேலம்: அதிமுக ஒருங்கிணைப்புக்குழுவை சேர்ந்த பெங்களூரூ புகழேந்தி சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: உழைக்காமல் பதவிக்கு வந்தவர் என்று எடப்பாடி பழனிசாமி அண்ணாமலையை கூறினார். திடீரென 6 மாதம் கழித்து கூட்டணி பற்றி பேசலாம் என்று கூறுகிறார். அண்ணாமலை, திடீரென அண்ணன் எடப்பாடி என்கிறார். நேற்று வரை பச்சை துரோகி என்றும், இன்று அண்ணா என்றும் அண்ணாமலை கூறுகிறார். தன்மானம் வேண்டும், சுயமரியாதை வேண்டும்.
தைரியம் இருந்தால் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி இரண்டு பேரும், எங்கள் தலைவர் பழனிசாமி சொல்லிவிட்டார், பிஜேபியிடம் கூட்டணி இல்லை என்று தில்லாக கூறட்டும். இந்த பக்கம் சண்முகம், செல்லூர்ராஜூ, ஜெயக்குமார் என இரு பிரிவாக பிரிந்து நிற்கின்றனர். இதற்கு நடுவில் மாட்டிக்கொண்டு பழனிசாமி தவித்து வருகிறார். அதற்குதான் கூட்டணி பற்றி முடிவெடுக்க 6மாதம் கால அவகாசம் கேட்கிறார்.
2026ம் ஆண்டு தேர்தலில் அதிமுக காணாமல் போய்விடும். அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நடப்பது கொள்கை ரீதியான தகராறாகும். ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு எந்த காலக்கட்டத்திலும் பிஜேபியுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று கூறிவிட்டு சென்றார். இவர்கள்தான் மாற்றிக்கொண்டனர்.
2026 சட்டமன்றத் ேதர்தலில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமியால் வாங்க முடியாது. கொடநாடு கொலை,கொள்ளையில் தொடர்புடையவர்கள் யார்? என்பது மிகவும் தாமதமாக போய் கொண்டிருக்கிறது. இது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் விசாரிக்க வேண்டும். அவரிடம் விசாரிக்கவில்லை என்றால் நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு புகழேந்தி கூறினார்.
The post எடப்பாடி மீது திடீர் பாசம் அண்ணாமலைக்கு தன்மானம் எங்கே போச்சு? புகழேந்தி கேள்வி appeared first on Dinakaran.