டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறுவது ஓர் இடி முழக்கம் போன்ற சகாப்தத்தைக் குறிக்கிறது என்றும், அவருடைய காலக்கட்டம் மன உறுதி, தீரம் மற்றும் துணிச்சலால் நிரம்பியது என்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், இந்திய முன்னாள் பயிற்சியாளருமான கிரெக் சாப்பல் வானளாவ புகழ்ந்துள்ளார்.
ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் எழுதிய பத்தி ஒன்றில் அவர் எழுதியதில் இருந்து சில பகுதிகள் இதோ: விராட் கோலியின் ஓய்வு சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டையே உருமாற்றம் செய்த ஓர் ஆளுமையின் அத்தியாயத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. ஆனால் ஓய்வறை, கிரிக்கெட் களச் செயல்பாடு என்று கிரிக்கெட் கலாச்சாரத்தையே மாற்றியதில் சச்சின் டெண்டுல்கரையும் கடந்து விஞ்சி நிற்பவர் விராட் கோலி.