கரிசல் வட்டாரத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியில் நடந்த ‘நல்லதங்காள்’ கதை மிகவும் பிரபலமானது. ‘நல்லதங்காள் சரித்திரம்’ தெருக்கூத்துகளிலும் நாடகமாக நடத்தப்பட்டது. இது ஒரு துன்பியல் கதையாகும். நல்ல தங்காள் கதையை பாக்களோடு. உணர்ச்சி பொங்க புகழேந்தி புலவர் எழுதியுள்ளார். கதையின் நாயகியின் பெயர் நல்ல தங்காள். அவளது அண்ணன் நல்ல தம்பி. செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்து வாழ்ந்தார்கள். தனது தங்கை நல்லதங்காளுக்கு மானாமதுரையை ஆண்ட சிற்றரசன் காசிராஜனுக்கு சீறும் சிறப்புமாக திருமணம் செய்து வைத்தான் நல்ல தம்பி.
நல்ல தங்காளுக்கு 7 குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், நாட்டில் மழை பெய்யாமல் ஏற்பட்ட பஞ்சத்தால் உண்ண உணவின்றி மக்கள் வறுமையால் அவதிப்பட்டனர். மக்களைக் காப்பாற்ற சொத்துகள், ஆபரணங்கள் என அனைத்தையும் விற்றான். கஜானா காலியானது. வறுமை அரச குடும்பத்தையும் ஆட்டிப் படைத்தது. தன்னுடைய குழந்தைகளைக் காப்பாற்றும் எண்ணத்தில், கணவனின் சொல்லையும் மீறி அண்ணனிடம் புகலிடம் தேடி வந்தாள் நல்ல தங்காள். ஆனால், அண்ணனின் மனைவியால் நயவஞ்சகமாகத் துரத்தியடிக்கப்படுகிறாள். தன் குழந்தைகள் படும் கஷ்டங்களைப் பார்க்க சகிக்காது, பாழுங்கிணற்றில் குழந்தைகளைத் தள்ளி கொன்றுவிட்டு தன்னையும் மாய்த்துக் கொண்டாள். இவ்வாறு அந்தக் கதை முடியும்.