காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இத்தகைய செயல்கள் மூலம் காஷ்மீரில் பதற்றத்தைப் பரவச்செய்யும் முயற்சிகளில் ஈடுபடும் சக்திகள் முறியடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பைசரன் பகுதியில், ஏப்ரல் 22 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் குழு என்று கருதப்படும் தி ரெசிஸ்டண்ட் ஃபிரண்ட் (டிஆர்எஃப்) பொறுப்பேற்றிருக்கிறது.