சென்னை: கோடை காலங்களில் மின்சார விநியோகத்தை சமாளிப்பதற்காக ஒன்றிய தொகுப்பிலிருந்து கூடுதலாக 3000 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு மின்வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. ஒன்றிய அரசின் எரிசக்தித்துறை செயலர் பங்கஜ் அகர்வால் மற்றும் நிலக்கரி துறை செயலர் விக்ரம் தேவ் தத் ஆகியோருடன் இணை கூட்டுக்குழு கூட்டம் புதுதில்லியில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்துக்கு வழங்கிய சந்திரப்பிலா நிலக்கரி சுரங்கத்தை ஒப்படைத்தது குறித்தும் அதற்குரிய டெபாசிட் தொகையையும் திரும்ப வழங்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் வரும் கோடை காலங்களில் மின்சார விநியோகத்தை சமாளிப்பதற்காக ஒன்றிய தொகுப்பிலிருந்து கூடுதலாக 3000 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும்.
குறுகிய காலத்திற்கு மின் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதனை தொடர்ந்து, தமிழ்நாடு மின்சார வாரியத் திட்டங்களுக்கு நிதி வழங்கி வரும் பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் , ஊரக மின்மயமாக்கல் கழக நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து, மேற்கொண்டு வரும் திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நிதியினை விரைந்து வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
The post கோடைகால மின் விநியோகத்தை சமாளிக்க 3000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும்: ஒன்றிய அரசிடம் தமிழக மின்வாரியம் கோரிக்கை appeared first on Dinakaran.