சென்னை: கோயில் இசை கச்சேரிகளில் சினிமா பாடல்கள் பாட அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் விழாக்களின்போது சினிமா பாடல்கள் பாடப்படுவதை எதிர்த்து வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். புதுச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் புதுச்சேரி திருமலையராயன் பட்டினம் பகுதியில் உள்ள வீதி வரதராஜ பெருமாள் கோயில் திருவிழாவின் போது, கோயில் வளாகத்திற்குள் இசைக்கச்சேரி நடத்தப்பட்டது. அதில் பக்தி பாடல்களை தவிர சினிமா பாடல்கள் அதிகமாக பாடப்பட்டதாகவும், கோவிலுக்கு அறங்காவலரை நியமிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி, பரத சக்ரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோயிலுக்குள் பக்தி பாடல்கள் மட்டுமே பாட அனுமதி உண்டு என்று அறநிலையத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அறங்காவலர் நியமனம் தொடர்பான அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாகவும் தெரிவித்தது. இதை ஏற்ற நீதிபதி; கோயில் இசை கச்சேரிகளில் சினிமா பாடல்கள் பாட அனுமதியில்லை. கோயில் இசை கச்சேரிகள் நடத்தப்படும் போது பக்தி பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும். கோயில்களில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பக்தி பாடல்களை பாட மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.
The post கோயில் திருவிழா கச்சேரியில் சினிமா பாடல்களை பாடக் கூடாது: ஐகோர்ட் அதிரடி! appeared first on Dinakaran.