கராச்சி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததால் பாகிஸ்தான் மிகவும் ஆத்திரத்தில் உள்ளது. தினமும் பாகிஸ்தான் தலைவர்கள் ஏதாவது ஒரு அறிக்கையை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஹனீஃப் அப்பாஸி அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானின் தண்ணீரை இந்தியா நிறுத்தினால், அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். பாகிஸ்தான் ஏவுகணைகள் அனைத்தும் இந்தியாவை நோக்கிச் செல்லும்.
எந்தவொரு தீவிரமான நடவடிக்கையையும் எடுத்தாலும், அதற்கான விலையை இந்தியா கொடுக்க வேண்டியிருக்கும். உலகின் மிக சக்திவாய்ந்த அணுகுண்டு நம்மிடம் உள்ளது. கோரி, ஷாஹீன், கஸ்னவி போன்ற ஏவுகணைகளையும், 130 அணுகுண்டுகளையும் இந்தியாவுக்காக மட்டுமே வைத்திருக்கிறோம். தூதரக முயற்சிகளுடன், நம்முடைய எல்லைகளைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகிறோம். பாகிஸ்தான் ரயில்வே, ராணுவத்திற்கு உதவ தயாராக உள்ளது’ என்று கூறினார்.
முன்னதாக, நிராயுதபாணியான சுற்றுலாப் பயணிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய லஷ்கர் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று வர்ணித்திருந்தார். பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, ‘சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் இந்தியாவின் முடிவானது ஒருதலைப்பட்ச நடவடிக்கை; சிந்து நதி எங்களுடையது, அது எங்களுடையதாகவே இருக்கும். இல்லாவிட்டால் சிந்துவில் தண்ணீரோ அல்லது அவர்களின் ரத்தமோ ஓடும். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது எங்களுக்கு எதிரான போர் நடவடிக்கையாகும்’ என்று கூறினார்.
The post கோரி, ஷாஹீன், கஸ்னவி போன்ற ஏவுகணையும் 130 அணுகுண்டுகளை இந்தியாவுக்காக வைத்திருக்கிறோம்: பாக். ரயில்வே அமைச்சர் மிரட்டல் appeared first on Dinakaran.