என்.டி.ராமராவ், நாகேஸ்வர ராவ் நடித்து, எல்.வி.பிரசாத் தெலுங்கில் இயக்கிய ‘சம்சாரம்’, வெற்றிபெற்றதை அடுத்து, அந்தப் படத்தைத் தனது ஜெமினி ஸ்டூடியோ ஊழியர்கள், அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுக்குத் திரையிட்டுக் காண்பித்தார், எஸ்.எஸ்.வாசன். படத்தைப் பார்த்த அவர்கள் உருகி அழுதனர்.
இதையடுத்து அந்தப் படத்தின் தமிழ், இந்தி உரிமையை வாங்கிய அவர், இரண்டு மொழியிலும் ஒரே நேரத்தில் ரீமேக் செய்தார். கதையில் தமிழுக்கு ஏற்ப சின்ன சின்ன மாற்றங்கள் செய்யப்பட்டன. ஜெமினியின் ‘சந்திரலேகா’ இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதால், தமிழ் நடிகர்களை இந்திப் பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பினார், வாசன். ஒரே செட், உடைகள் போன்றவை இரண்டு படங்களுக்கும் போதும் என்பதால், சிக்கனமாகப் படத்தை உருவாக்க முடிந்தது. ஆனால், பெரும்பாலான தென்னிந்திய நடிகர்களுக்கு இந்தி தெரியாது என்பதால் டப்பிங் கலைஞர்களைப் பயன்படுத்த முடிவு செய்தார்கள். இதற்காகவே, ஹாலிவுட் பாணி டப்பிங் ஸ்டூடியோவை அமைத்தார் வாசன்.