ஒரு சாதி சங்கத்தின் நிர்வாகத்தை மேற்கொள்ள சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது. நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி அளித்த தீர்ப்பில், ‘சாதி சங்கங்கள் நடத்தும் பள்ளி கல்லூரி போன்ற நிறுவனங்களின் பெயர் பலகைகளில் சாதிப் பெயர்களை நீக்க வேண்டும். அவ்வாறு நீக்காத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பை ஏன் பிறப்பிக்க வேண்டி வந்தது என்பதையும் நீதிபதி கூறியுள்ளார். ‘‘வேறு சாதியில் திருமணம் செய்து கொண்டதற்காக பெற்ற பிள்ளைகளை பெற்றோரே கொலை செய்யும் சம்பவங்கள் நடப்பதாலும் கைகளில் சாதி கயிறு கட்டிக் கொண்டு புத்தக பைகளில் அரிவாளுடன் மாணவர்கள் வகுப்பறைக்கு வந்து தாக்குதல்கள் நடத்துவதாலும் இப்படி ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டியுள்ளது’’ என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.