நாகப்பட்டினம்: இந்தோனேஷியா பெண்ணுக்கும், நாகை இன்ஜினியருக்கும் நேற்று நாகையில் காதல் திருமணம் நடந்தது. நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பம் சேவாபாரதியை சேர்ந்தவர்கள் கண்ணதாசன் – மகாலட்சுமி. இவர்களது மகன் ஜெசின்குமார். சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஇ படித்த இவர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் சென்றார். அங்குள்ள சிங்கப்பூர் அரசுக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளத்தில் பொறியியல் பிரிவில் மேலாளராக பணியாற்றினார்.
அங்கு இந்தோனேஷியாவை சேர்ந்த அன்டோனியஸ் மார்டினஸ்ராபா- அடோல்பினாலோட்டோ பாரிங்கியின் மகள் பிஇ பட்டதாரியான கிரேஸ்வீல்டிராபா மேலாளராக பணியாற்றி வந்தார். அடிக்கடி சந்தித்த இருவருக்குள் காதல் மலர்ந்தது. 3 வருடங்களாக காதலித்த இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இதுபற்றி பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இரு வீட்டாரும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் காதலை ஏற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து முறைப்படி நேற்று திருமணம் நடைபெற்றது.
புரோகிதர் வேத மந்திரங்கள் ஓத, பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மணமகன், காதலிக்கு தாலி கட்டினார். திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தோனேஷியாவில் இருந்து, நாகைக்கு மருமகளாக வந்த மணப்பெண்ணிற்கு உறவினர்கள் பரிசுகள் கொடுத்து வாழ்த்தினர்.
The post சிங்கப்பூரில் சிறகடித்த காதல்; இந்தோனேஷிய பெண்ணை மணந்த நாகை இன்ஜினியர் appeared first on Dinakaran.