சென்னை: லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில் வருகின்ற 8ம் தேதி முதன்முறையாக புதிய சிம்பொனி இசைக்கோர்வையை இசையமைப்பாளர் இளையராஜா அரங்கேற்றம் செய்யவுள்ளார். இதன் காரணமாக அவரை பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் சந்தித்து தங்களது வாழ்த்தை தெரிவித்து வந்தனர்.
அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமாக தலைவர் ஜி.கே.வாசன், விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று லண்டன் புறப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;
சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சிம்பொனி இசை ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். உலகிலேயே தலைசிறந்த இசை திருவிழாவாக நடைபெற உள்ளது. இது என்னுடைய பெருமையில்லை. நம் பெருமை. நம் தமிழ்நாட்டின் பெருமை. இந்தியாவின் பெருமை. நீங்களெல்லாம் சேர்ந்துதான் நான். Incredible இந்தியா மாதிரி, நான் Incredible இளையராஜா. உங்களுக்கே அவ்வளவு மகிழ்ச்சி இருக்கும்போது. எனக்கு எவ்ளோ மகிழ்ச்சி இருக்கும். உங்களின் பெருமையைதான் லண்டனில் சேர்க்கப் போகிறேன். இதுக்கு மேல யாரும் வரப்போறதும் இல்லை. வந்ததும் இல்லை. இறைவனுடைய அருள் நம் எல்லோருக்கும் பரிபூரணமாக இருக்க வாழ்த்துகள் என்று அவர் கூறினார்.
The post சிம்பொனி இசை ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்; உலகிலேயே தலைசிறந்த இசை திருவிழா: இசையமைப்பாளர் இளையராஜா நெகிழ்ச்சி! appeared first on Dinakaran.