காட்டுமன்னார்கோவில்: பெயின்டர் கொலையில் புகாரை பெறாத இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐகளை சஸ்பெண்ட் செய்து எஸ்பி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த குமார் மகன் லெப்ட் (எ) பிரவீன்ராஜ் (23), சென்னையில் பெயின்டராக வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன் தனது நண்பர் திருமணத்திற்கு சொந்த ஊருக்கு வந்தவர், சந்தைதோப்பு பகுதியில் பைக்கில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மணிகண்டன் என்பவர் மீது மோதி உள்ளார்.
இதனால் மணிகண்டன் தரப்பினர் வாகனம் சேதம் அடைந்ததற்கு நஷ்ட ஈடு கேட்டுள்ளனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்களான சிவராஜ், செந்தில் குமார் ஆகியோரை பிரவீன்ராஜ் தாக்கி கத்தியால் கிழித்துள்ளனர். அதில் மணிகண்டன் தரப்பினர் காவல் நிலையத்தில் கடந்த 6ம் தேதி பிரவீன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்க சென்றனர். அப்போது பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் எஸ்ஐகள் புகாரை பெறாமல் அலட்சியமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் பிரவீன்ராஜ் அவரது தெரு அருகில் மது அருந்தி உள்ளார். அப்போது அதே பகுதியில் மறைந்திருந்த மணிகண்டன் தரப்பினர் 7 பேர் கொண்ட கும்பல் பிரவீன்ராஜை கத்தியால் வெட்டியும் கம்பிகளை கொண்டு தலை, கழுத்து, கால் பகுதியிலும் தாக்கி உள்ளனர். இதனால் பிரவீன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மணிகண்டன்(21) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். 2 பேரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் ரத்த காயமடைந்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க வந்த நிலையில் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, அன்பழகன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி ஜெயகுமார் அதிரடியாக உத்தரவிட்டார்.
The post சென்னை பெயின்டர் கொலையில் புகாரை பெறாத இன்ஸ்பெக்டர் 2 எஸ்ஐகள் அதிரடி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.