மதுரை: சாலைகளில் கட்சி கொடிக்கம்பங்கள், பேனர் வைக்க அனுமதிக்க மாட்டோம். இது, ஜனநாயக உரிமையாக பார்க்க முடியாது. தடையற்ற போக்குவரத்து, மக்களின் பாதுகாப்பு முக்கியம் என கூறி ஐகோர்ட் கிளை மேல்முறையீட்டு மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த அமாவாசை, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: மதுரை விளாங்குடி பகுதியில் அதிமுக கொடிக்கம்பம் வைக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, தமிழ்நாட்டில் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளில் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி, சாதி, மத மற்றும் பிற அமைப்புகளின் நிரந்தர கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும். அரசியல் கட்சியை சேர்ந்தவர்களோ, சாதி, மத அமைப்பினரோ அவர்களுக்கு சொந்தமான இடங்களில் முறையாக அனுமதி பெற்று நிரந்தரமாக கொடிக்கம்பங்களை வைத்துக் கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு கொடிக்கம்பங்களை வைப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவு சட்டவிரோதமானது. இதனால், மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகியுள்ளோம். எனவே, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து, சாலையோரங்களில் கட்சி கொடிக்கம்பங்கள் வைக்கவும், கட்சிக்கொடி ஏற்றவும் அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர், ‘‘தனி நீதிபதியின் உத்தரவில் என்ன தவறு உள்ளது? சம்பந்தப்பட்டவர்கள் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் கட்சி கொடிக்கம்பங்களை வைத்துக்கொள்ளட்டும்’’ என்றனர். அப்போது போலீஸ் தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ‘‘தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள் உள்ளன. சாலையோரங்களில் கொடிகள் வைப்பது, கொடி கம்பங்கள் அமைப்பது கட்சிகளின் ஜனநாயக உரிமையாக பார்க்கப்படுகிறது.
இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் கட்சி கொடிக் கம்பங்கள் வைக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கக் கூடாது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே சாலைகளில் கொடிக்கம்பங்கள் நடுவது வழக்கத்தில் உள்ளது. சேர, சோழ, பாண்டியர்கள் இமயத்திலும் கொடி நட்டார்கள் என்கிற பெருமை தமிழர்களுக்கு உண்டு. அதேபோல் சுதந்திரப் போராட்ட வீரர் கொடிகாத்த குமரன் வரலாறு நமக்கு தேசப்பற்றை ஊட்டுகிறது.
எனவே, சாலை ஓரங்களில் கட்சி கொடிகள் வைக்க அனுமதிக்க வேண்டும். ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடைபெற்று இருக்கலாம். அதற்காக, முற்றிலும் தடை விதிக்கக்கூடாது. இது அரசியல் கட்சிகளுடைய ஜனநாயக உரிமை’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் கட்சிக் கொடிகள், பிளக்ஸ் பேனர்கள் வைப்பதால் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுவதை நாங்கள் உணர்ந்துள்ளோம். இதுபோன்ற உயிரிழப்புகள் ஒரு குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்பதும் எங்களுக்கு தெரியும். சாலைகள் என்பது தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும்.
பொதுமக்களின் பாதுகாப்பும் முக்கியம். நெடுஞ்சாலைகளில் கட்சிக் கொடிகள், பிளக்ஸ் பேனர்கள், கொடிக் கம்பங்கள் வைக்க எந்த அனுமதியும் கிடையாது. இதுபோன்று கட்சி கொடிக் கம்பங்கள், கட்சிக் கொடிகள் ஊன்றப்படுவதால் போக்குவரத்திற்கு தடை ஏற்படுகிறது. எனவே, ஒருபோதும் இதை அனுமதிக்க மாட்டோம். சட்ட விதிகளின் படி பொது இடங்களில் அரசியல் கட்சிகளுக்கோ அல்லது அமைப்புகளுக்கோ அனுமதி வழங்க அரசுக்கு அதிகாரமில்லை. எனவே, தனிநீதிபதியின் உத்தரவு சரிதான்.
அனைத்து அரசியல் கட்சிகள், தங்களது கொடிக் கம்பங்களை, கொடிகளை கட்சி அலுவலகங்களில் வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். வீதிகளில் வந்து வைக்க வேண்டாம். திருப்பூர் கொடிகாத்த குமரன் சுதந்திரப் போராட்டத்தை வலியுறுத்தி கையில் தான் கொடி ஏந்தி சென்றார். எந்த தெருவிலும், சாலையிலும் ஊன்றவில்லை. சாலைகளில் தான் கட்சிக் கொடிக்கம்பங்களை ஊன்ற வேண்டும் என்பதை ஜனநாயக உரிமையாக பார்க்க முடியாது. இவ்வழக்கில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.
The post ஜனநாயக உரிமையாக பார்க்க முடியாது சாலைகளில் கட்சி கொடிக்கம்பங்கள் பேனர் வைக்க அனுமதிக்க மாட்டோம்: மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை அதிரடி appeared first on Dinakaran.