ஊட்டி: வார இறுதி நாளான நேற்று இதமான காலநிலை நிலவிய நிலையில் ஊட்டி சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிரான காலநிலை நிலவி வருகிறது. பகல் நேரங்களில் வெயில் கொளுத்தினாலும், குளிர் காணப்படுகிறது. இந்த சூழலில் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நெருங்கிய நிலையில் வார நாட்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைவாகவே உள்ளது. கேரளா, கர்நாடகாவில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகளை மட்டுமே காண முடிகிறது. அதே நேரம் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியது. ஊட்டி தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் காணப்பட்டது. ஊட்டி படகு இல்லத்தில் இருந்து ஊட்டி ஏரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். படகு இல்ல சாலையில் சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். ரோஜா பூங்காவை ஏராளமான சுற்றுலா பயணிகள் முற்றுகையிட்ட நிலையில், அங்கு மலர்கள் குறைவாக இருந்ததால் ஏமாற்றமடைந்தனர். இதேபோல் நகருக்கு வெளியில் உள்ள சுற்றுலா தலங்களான சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம், அருவி உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் காணப்பட்டது.
The post ஜில்லென்ற கால நிலை: ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு appeared first on Dinakaran.