நேபாளம், ஸ்காட்லாந்து, நெதர்லாந்து அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் ஸ்காட்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் கிளாஸ்கோவில் நேற்று நடைபெற்ற தொடரின் 2வது ஆட்டம் வரலாறு காணாத 3 சூப்பர் ஓவர் வரை சென்று கடைசியில் நெதர்லாந்து அணி போராடி வெற்றியை ஈட்டியது.
சமீப காலங்களாக நேபாள அணி பிரமாதமாக ஆடி வருகிறது. ஸ்காட்லாந்து அணிக்கு கடும் கடினப்பாடுகளைக் கொடுத்து சமீபத்தில் வென்றதும் நினைவிருக்கலாம். நேற்றைய போட்டியும் டி20 அரங்கில் நேபாளத்தின் எழுச்சிக்கு ஓர் உதாரணம். முழு நேர ஆட்டத்தில் நெதர்லாந்து முதலில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது. இலக்கை விரட்டிய நேபாள அணி 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை எடுக்க போட்டி டை ஆகி சூப்பர் ஓவருக்குச் சென்றது. இதுவே 3 சூப்பர் ஓவர்களாகி பிறகு நெதர்லாந்து போராடி வென்றது.