துபாய்: ஐசிசி ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்களுக்கான தரவரிசையில் 12 இடங்கள் முன்னேறி தற்போது 15-வது இடத்தை பிடித்துள்ளார் இந்திய பவுலர் முகமது சிராஜ்.
அண்மையில் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் சிராஜ். இந்த டெஸ்ட் போட்டியின் கடைசி நாளன்று தனது துல்லிய பந்துவீச்சின் மூலம் இந்திய அணிக்கு வெற்றி தேடி கொடுத்தார். ‘நான் வீசுகின்ற ஒவ்வொரு பந்தும் தேசத்துக்கானது’ என இந்த போட்டி முடிந்ததும் சிராஜ் தெரிவித்தார். இந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றிருந்தார்.