புதுடெல்லி: இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இது இந்தியாவின் பொருளாதாரத்தில் தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உலக பொருளாதார நிபுணர்கள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். இந்நிலையில், தனது எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருவதாக கூறி, நேற்று (ஆக.6) இந்தியாவுக்கு கூடுதலாக மேலும் 25 சதவீத வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். இந்த கூடுதல் வரி வரும் 27-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அதே நேரத்தில் ஏற்கெனவே அறிவித்த 25 சதவீத வரி வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.