கோவை: “காவேரி கூக்குரல் இயக்கம் கடந்தாண்டில் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 1.36 கோடி மரங்களை நட்டு சாதனை படைத்துள்ளது. நடப்பாண்டு, தமிழகத்தில் 1.21 கோடி மரங்களை நட இலக்கு நிர்ணயித்துள்ளது” என ஈஷா மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட தகவல்: ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் கடந்த நிதியாண்டில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 1.36 கோடி மரக்கன்றுகளை விவசாயிகள் மூலம் அவர்களின் நிலங்களில் நடவு செய்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் (2025-26) தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடியே இருபத்தியோரு லட்சம் மரங்கள் நட இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் துவக்க விழா, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இன்று (ஜூன் 5) ஓசூர் பத்தலப்பள்ளியில் உள்ள செயின்ட் பீட்டர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பாக ‘ஒரு கிராமம் ஒரு அரச மரம்’ திட்டத்தின் மூலம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரச மரங்கள் நடப்பட்டன.