புதுடெல்லி: தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் திமுக வேண்டுமென்றே அரசியல் செய்வதாக மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடுமையாக விமர்சித்தார். ‘ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள், அநாகரிகமானவர்கள்’ என்று அவர் பேசியதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர் மீது கனிமொழி எம்.பி. உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியதை அடுத்து, தனது பேச்சை திரும்ப பெறுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்துக்கு கல்வி நிதி ஒதுக்கப்படாத விவகாரத்தை மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் நேற்று எழுப்பினார். ‘‘பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழகத்துக்கு ரூ.2,000 கோடி வழங்க மத்திய அரசு உறுதி அளித்தது. நாங்கள் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றாததால் தமிழகத்துக்கு நிதி மறுக்கப்படுகிறது. மத்திய அரசின் செயல், தமிழக பள்ளி மாணவர்களின் கல்வியை பாதிக்கிறது" என்று அவர் கூறினார்.