சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்வதை கண்டித்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் கனிமொழி எம்பி தலைமையில் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கூட்டணி கட்சி எம்பிக்களும் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர். இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி தலைமையில் இன்று காலை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தயாநிதிமாறன், ஆ.ராசா உள்ளிட்ட திமுக எம்.பிக்கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீர்வு வேண்டும்! தீர்வு வேண்டும்!! மீனவர்களின் கைதுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்! தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்!! என முழக்கமிட்டு ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.
மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பதும், அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவிக்காமல் இருப்பதும், கடலோரப் பகுதியில் வாழும் மீனவ சமுதாயத்தினருக்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, நமது தமிழ்நாடு மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவதை நிறுத்தவும், இலங்கையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப்படகுகளையும் விடுவிக்க வழி செய்யும் வகையில், உடனடியாக உயர்மட்ட தூதரக நடவடிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. முன்னதாக, மீனவர் பிரச்னை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி நோட்டீஸ் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை படையால் கைது செய்யப்படுவது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி திமுக சார்பில் நோட்டீஸ் அளித்துள்ளார். இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது, இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு மட்டும் இலங்கை கடற்படையால் 530 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டு 71 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை சிறைகளில் தற்போது 97 மீனவர்கள் உள்ளனர்; தமிழ்நாட்டைச் சேர்ந்த 216 படகுகள் இலங்கை வசம் உள்ளது. மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
The post தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்வதை கண்டித்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் போராட்டம்: கூட்டணி கட்சி எம்பிக்களும் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர் appeared first on Dinakaran.