மதுரை / தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கோயில் திருப்பணிகளுக்காக அமைக்கப்பட்ட குழுவில் ஆகம நிபுணர்கள் இடம் பெறவில்லை. கடலோர கட்டுப்பாட்டு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் உரிய அனுமதி பெறாமல் கட்டிடங்கள்கட்டப்பட்டுள்ளன.
கோயிலில் 24 புனித தீர்த்தங்களில் நாழிக்கிணறு என்ற தீர்த்தம் மட்டுமே தற்போது உள்ளது. தீர்த்தங்களின் பெயர்களை குறிப்பிட்டு கல் தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தூண்கள் கோயில் திருப்பணிகளின்போது மறைக்கப்பட்டுள்ளன. இந்த கல் தூண்களை மீண்டும் நிறுவ வேண்டும். கும்பாபிஷேகத்தின்போது ஹெலிகாப்டரில் மலர் தூவும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வருவதில்லை. ஹெலிகாப்டரில் மலர் தூவும் நிகழ்வுக்கு கோயில் நிதி செலவிடப்படுவது தவறு.