ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் மகன் நித்தின்ராகுல் (20). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த அனுமுத்து மகள் தரணி (20) என்பவரும் படித்து வந்தார். ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கினர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில் மாணவி தரணி, 9 மாத கர்ப்பிணியானார்.
இந்நிலையில் கல்லூரி விடுமுறை காரணமாக இருவரும் அவரவர் வீடுகளுக்கு திரும்பினர். நித்தின்ராகுல் தனது பெற்றோரிடம் தரணியை திருமணம் செய்து வைக்குமாறு கேட்டு வந்துள்ளார். அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த சில நாட்களாக நித்தின்ராகுல் மனவேதனையில் இருந்து வந்தாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெரியாங்குப்பம் பகுதியில் ரயிலில் பாய்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் காதலன் தற்கொலை செய்ததை அறிந்த தரணி கதறி அழுதார். வாணியம்பாடியில் வசிக்கும் தனது பாட்டி வீட்டுக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு அங்கு சென்ற அவர், நேற்று அதிகாலை அங்குள்ள ரயில்வே தண்டவாளம் வழியாக நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த ரயில் முன் தரணி பாய்ந்தார்.
இதில் தூக்கிவீசப்பட்ட அவர் அதே இடத்தில் பலியானார். மேலும் அவரது வயிற்றில் இருந்த 9 மாத சிசுவும் வெளியே விழுந்து இறந்தது. தகவலறிந்து சென்ற ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் தரணி மற்றும் சிசுவின் சடலத்தை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். ஒரே கல்லூரியில் படித்து வந்த காதலர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு ரயில் முன் பாய்ந்து காதலன் கர்ப்பிணி காதலி தற்கொலை: வயிற்றிலிருந்து விழுந்த 9 மாத சிசுவும் சாவு appeared first on Dinakaran.