திருவொற்றியூர்: திருவொற்றியூரில் ரூ.34.35 கோடி மதிப்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழிவிட் மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளிக்கு வழங்க கோரி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் கடற்கரை சாலையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ஒன்றிய அரசு நிதி பங்களிப்புடன், கடந்த 2019ம் ஆண்டு ரூ.34.35 கோடி மதிப்பீட்டில், 360 சதுர அடியில், 5 மாடி கொண்ட 352 குடியிருப்புகள் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு 2023ம் ஆண்டு முடிக்கப்பட்டது. இந்த குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய ஒவ்வொரு பயனாளியும் ரூ.2.40 லட்சம் செலுத்த வேண்டும், என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனை ஏற்க மறுத்த மீனவர்கள், மீன்பிடி தொழில் செய்யும் தங்களால் அதிக தொகை கட்ட முடியாது. அதனால் இலவசமாக வழங்க வேண்டும், அல்லது குறைந்த தொகையை, வட்டி இல்லாமல் தவணை முறையில் வசூல் செய்ய வேண்டும், என்றனர். இதுதொடர்பாக, அரசு அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாகிகளிடையே பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடந்த நிலையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகளை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 300க்கும் மேற்பட்டோர் எண்ணூர் விரைவு சாலையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட மீனவ மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் ஒருவாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, மீனவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து பயனாளிகள் கூறுகையில், ‘‘இந்த குடியிருப்புகளை பெற ஒவ்வொரு பயனாளியும் அரசுக்கு ரூ.2 லட்சம் 40 ஆயிரம் கட்ட வேண்டும் என தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதன்படி பயனாளிகள் அனைவரும் தலா ரூ.50 ஆயிரம் முன் பணமாக செலுத்தியுள்ளோம். ஆனால், மீதமுள்ள ரூ.1.90 லட்சத்தை எங்களால் கட்ட முடியாது. எனவே நிர்ணயிக்கப்பட்ட தொகையை குறைக்க வேண்டும். மீதமுள்ள தொகையை வட்டி இல்லாமல் தவணை முறையில் கட்டுவதற்கு அனுமதி தந்து, உடனடியாக குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்,’ என்றனர்.
The post திருவொற்றியூர் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்ய கோரி மீனவர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.