ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி அப்துல் ரவூப் அசாரின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர் என்று புகைப்பட ஆதாரத்துடன் இந்தியா குற்றம் சாட்டி உள்ளது. கடந்த 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமான கடத்தலில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி அப்துல் ரவூப் அசார் மூளையாக செயல்பட்டார். அவரது அண்ணன் மசூத் அசார் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவராக உள்ளார்.
அண்ணனும் தம்பியும் பாகிஸ்தானின் பாவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாமில் தங்கியிருந்தனர். சில நாட்களுக்கு முன்பு மசூத் அசார் அங்கிருந்து வெளியேறிவிட்டார். இந்த சூழலில் கடந்த 7-ம் தேதி இந்திய விமானப்படை பாவல்பூர் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாமின் மீது தாக்குதல் நடத்தியது. இதில் மசூத் அசாரின் தம்பி அப்துல் ரவூப் அசார் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தை சேர்ந்த 10 பேரும் உயிரிழந்தனர்.