சென்னை: தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் என்ற புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. பீக் ஹவர்களில் தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், வேலைக்கு செல்வோர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆம்புலன்ஸ் வந்தாலும் கூட வழி கிடைப்பது இல்லை என்பது மிகவும் வருத்தத்திற்கு உரிய விஷயமாகும். அதனால் தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முக்கிய முடிவு எடுத்துள்ளது.
தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு தென்மாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்பட்ட பேருந்துகள் இன்று(மார்ச் 4)முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்திருந்தது. இதனையடுத்து, தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த போக்குவரத்துக் கழக பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை மட்டுமே இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலுருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி மாநகர போக்குவரத்து கழகத்தில் தற்போது 80 வழித்தடங்களில் 589 பேருந்துகள் 3795 பயணநடைகள் இயக்கப்பட்டு வருவதுடன் கூடுதலாக 104 பேருந்துகள் 816 பயணநடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் மாநகர போக்குவரத்து சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
The post தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் என்ற புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது appeared first on Dinakaran.