மக்களாட்சியில், அனைவருக்கும் ஒரே மதிப்புடைய வாக்கு இருப்பதை உறுதிசெய்கிறது இந்திய அரசமைப்பு. அந்த வகையில், நாடாளுமன்ற / சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடையே உள்ள மக்கள்தொகை வேறுபாட்டின் காரணமாக வாக்குகளின் மதிப்பு மாறுபடக் கூடாது என்பதற்காகத் தொகுதி மறுவரையறை என்பது அவசியமாகிறது. இந்தத் தொகுதி மறுவரையறையை 2026க்குப் பிறகான முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி செய்ய வேண்டும் என்கிறது அரசமைப்பின் 84ஆவது சட்டத்திருத்தம்.
இந்நிலையில்தான், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 அன்று தொடங்கும் என்று மத்திய பாஜக அரசு அறிவித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, “மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தாமதம் என்பது ஒரு விபத்தல்ல. தொகுதி மறுவரையறைத் திட்டம் தற்செயலானதும் அல்ல. பாஜக தலைமையிலான மத்திய அரசு, மக்கள்தொகைக் கணக்கெடுப்பையும் அதைத் தொடர்ந்து வரும் தொகுதி மறுவரையறையையும் செயல்படுத்துவதில் ஒரு மோசமான வடிவமைப்பு உள்ளது” என்று கூறியுள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.