சென்னை: தொகுதி மறு சீரமைப்பில் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என பிரதமர் மோடி எழுத்துப் பூர்வமாக உறுதி மொழி தர வேண்டும் என்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் சென்னை கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று மாலை நடந்தது.
பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 72வது பிறந்தநாள் கொண்டாடும் நான் 75வது ஆண்டு பவள விழா கொண்டாடிய திமுகவின் தலைவராகப் பணியாற்றி வருவதுதான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை! திமுக தலைமை பொறுப்பாக இருந்தாலும் தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பாக இருந்தாலும் இரண்டுமே அண்ணா இருந்த இடம். நம்முடைய கலைஞர் அமர்ந்த இடம். அந்த இடத்தில், இந்த சாதாரண சாமானிய ஸ்டாலினையும் உட்கார வைத்தது, திமுகவின் கோடான கோடி உடன்பிறப்புகள் தான்.
இது பிறந்தநாள் வாழ்த்துக்காக மட்டும் இல்லாமல், நம்முடைய தோழமைக் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் இணைந்து, தமிழ்நாட்டுக்கான உரிமைக்குரலை எழுப்புவதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இந்த மேடையே, உரிமைக்களமாக-வெற்றிக்கான அடித்தளமாக அமைந்திருக்கிறது. பிறந்தநாள் விழா மேடையைப் போல் இல்லை, வெற்றி விழா மேடையைப் போல் இருக்கிறது. ஆமாம், இது வெற்றி விழா மேடைதான்.
2019ல் இருந்து கொள்கைக் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று வரும் நாம், 2026-லும் அடைய இருக்கும் வெற்றிக்குத் தொடக்க விழா மேடை இது. என்னைச் சந்திப்பவர்கள், ‘உங்கள் வெற்றிக்கு எது அடிப்படை?’ என்று கேட்டால், எங்களின் தோழமை உணர்வுதான் என்று அனைத்து இடத்திலும் மறக்காமல் பதிவு செய்பவன் நான். ஊடக நண்பர்களுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, கருத்தியல் கூட்டணி அமைத்திருக்கும் எங்களுக்குள் கருத்து மாறுதல் வரும். ஆனால், விரிசல் வராது! எங்களின் ஒற்றுமையை எரிச்சலுடன் பார்த்து, விரிசல் வருமா என்று சிலர் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கலாம். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, உங்களின் ஆசையில்தான் மண் விழுமே தவிர; எங்கள் கூட்டணியில் விரிசல் விழாது!
தோழமைக் கட்சித் தலைவர்களே, என்னை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்தவர்கள் நீங்கள். உங்களை எப்போதும் என்னுடைய இதய நாற்காலியில் நான் உட்கார வைத்திருக்கிறேன். உங்களுக்கு நான் உறுதியோடு சொல்லிக் கொள்கிறேன். நம்முடைய ஒற்றுமைதான், தமிழ்நாட்டைக் காப்பாற்றியிருக்கிறது! தமிழைக் காப்பாற்றியிருக்கிறது! சமூகநீதியைக் காப்பாற்றியிருக்கிறது! சகோதரத்துவத்தைக் காப்பாற்றியிருக்கிறது! ஒற்றுமையைக் காப்பாற்றியிருக்கிறது! ஏன், ஒட்டுமொத்த இந்தியாவையே காப்பாற்றியிருக்கிறது. நீங்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
2021ல் தப்பித்தவறி அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருந்தால், இன்று தமிழ்நாடு தரைமட்டத்துக்குச் சென்றிருக்கும். தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளும் அதிமுக கொத்தடிமைகளால் அடகு வைக்கப்பட்டிருக்கும். அதிமுகவை மிரட்டிப் பணிய வைத்து, அவர்கள் கட்சியையும்-தமிழ்நாட்டையும் கபளீகரம் செய்திருக்கும் பாஜக. இந்தக் கொடிய சக்திகளிடம் இருந்து, தமிழ்நாட்டை மீட்ட கூட்டணி, நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. இன்றைக்கு, இந்தியாவுக்கு வழிகாட்டும் கூட்டணியும் நமது கூட்டணிதான். தமிழ்நாட்டை மற்ற மாநில மக்கள் எல்லாம், வியந்து பார்க்குற வகையில் திராவிட மாடல் ஆட்சியைச் சிறப்பாக நடத்தி வருகிறோம்.
இதை ஒன்றிய பாஜக அரசால், தாங்கிக் கொள்ள முடியவில்லை. நம்முடைய மாநிலத்துக்கான எந்த நன்மையையும் செய்வது இல்லை. பிறகு, என்ன செய்கிறார்கள்? எப்படியெல்லாம் தமிழ்நாட்டை வஞ்சிக்கலாம் என்று பார்த்து பார்த்துச் செய்கிறார்கள். நீட் தேர்வைத் திணித்தார்கள். புயல்-வெள்ளம் என்று பேரிடர் வந்தால், நிதி கொடுப்பதில்லை! இப்படி தொடர்ந்து வஞ்சிக்கிறார்கள். இப்போது சமீப காலமாக, தமிழ்நாடு எதனால் முன்னணியில் இருக்கிறது என்று பார்த்தவர்கள், கல்வியால் தான் இவர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு, அந்தக் கல்வியைச் சீர்குலைக்க, தேசிய கல்விக் கொள்கையைத் திணித்தால் இவர்கள் கீழே சென்றிடுவார்கள் என்று நினைத்தார்கள்.
ஆனால், நாம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை! அதனால் உடனே நிதி தரமாட்டோம் என்று சொல்கிறார்கள். நான் வேதனையோடு சொல்கிறேன், பள்ளிக் குழந்தைகள்-ஆசிரியர்களுக்காகச் சம்பளம் தர்ற நிதியில் கூட, கைவைக்கும் அளவுக்குக் கொடூரமானவர்கள் கையில் இந்தியா சிக்கியிருக்கிறது. நம்முடைய குழந்தைகளின் கல்விக் கனவைச் சிதைக்கும் காரியத்தை தர்மேந்திர பிரதான் செய்ய, அதைக் கண்டிக்காமல், தடுத்து நிறுத்தாமல், பிரதமர் மோடி வேடிக்கை பார்க்கிறார். இதுதான் ஒரு பிரதமருக்கு அழகா? பிரதமர் அவர்களே, இந்தியை எங்கள் மேல் திணிக்காதீர்கள். எங்களுக்குத் தாய்மொழியான தமிழும் – உலகத்துடன் தொடர்பு கொள்ள ஆங்கிலமும் போதும்.
தேவைப்பட்டால் இந்தி என்ன? கிரேக்கம் – இலத்தீன் மொழிகளைக்கூட அறிவியல்-தொழில்நுட்பம் மூலம் கற்றுக்கொள்ளப் போகிறோம். அனைத்துக்கும் முன்னோடியாகவும்-அனைவருக்கும் வழிகாட்டியாகவும் இருப்பதுதான் நம்முடைய தமிழ்நாடு. எனவே, எங்களை என்ன மிரட்டினாலும், உங்களால் இந்தி மொழியைத் திணிக்க முடியாது! மிரட்டினால், அஞ்சி நடுங்கிக் கூழைக்கும்பிடு போடுவதற்கு, அதிமுக என்ற நினைத்தீர்களா? இது திமுக. மிரட்டினால், அடங்கிப் போகிறவர்கள் இல்லை; அடக்க நினைப்பவர்களை அடங்கிப் போக வைப்பவர்கள்.
தமிழ்நாட்டுக்காகவும், தமிழ்மொழிக்காகவும் எத்தகைய அடக்குமுறையையும் எதிர்க்கும் துணிச்சல் கொண்டவர்கள் நாங்கள். இங்கு இருக்கும் நாங்கள் தமிழர்கள்! சுயமரியாதையுள்ள திராவிடர்கள். ஒன்றிய அரசு இப்போது என்ன நினைக்கிறார்கள்? இப்படி அறிவுப்பூர்வமாக-முற்போக்குச் சிந்தனையுடன் பேசுகிறார்களே! இங்கு மட்டுமல்ல, நாடாளுமன்றத்திலும் முழங்குகிறார்களே! இவர்களை எவ்வாறு தடுக்கலாம் என்று பார்த்தார்கள். அதற்குத்தான், இப்போது தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வரப்போகிறார்கள்! நம்முடைய தொகுதிகளின் எண்ணிக்கையை – நம்முடைய பிரதிநிதித்துவத்தைக் குறைக்க நினைக்கிறார்கள்.
அதனால்தான் முன்கூட்டியே இந்தப் பிரச்சினையை நாம் இப்போது கையில் எடுத்து இருக்கிறோம். பொத்தாம் பொதுவாக, தமிழ்நாட்டுக்குத் தொகுதிகள் குறையாது என்று சொல்கிறார்கள்! மற்ற மாநிலங்களுக்கு அதிகரிப்பார்களா? தெரியாது. நாங்கள் கேட்கும் கேள்வி, நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? “மற்ற மாநிலங்களுக்கு மக்கள்தொகை அடிப்படையில் அதிகரிக்காது” என்று ஏன் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்? முன்னாள் பிரதமர்கள் நேருவும், வாஜ்பாயும் உறுதி கொடுத்தது போன்று, பிரதமர் மோடி ஏன் உறுதி கொடுக்க மாட்டேன் என்கிறார்?
பிரதமர் அவர்களே, எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக உறுதி கொடுங்கள். “இப்போது இருக்கும் மக்கள் தொகை அடிப்படையில், தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படாது. 1971 மக்கள்தொகை அடிப்படையில், தமிழ்நாட்டுக்குரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும். தமிழ்நாட்டுக்குப் எந்த பாதிப்பும் ஏற்படாது!” என்று உறுதி கொடுங்கள். இன்றைக்குத் தமிழ்நாடு எழுப்பியிருக்கும் இந்த உரிமைக்குரலை, தெலங்கானா-கர்நாடகா எதிரொலித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றி! மற்ற மாநிலங்களும் நியாயத்துக்காகவும் – உரிமைக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறேன்.
இன்றைக்கு நாம் விழிப்புடன் இருந்து, நம்முடைய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தில் இனி ஒருபோதும் தமிழர்களின் கையில் அதிகாரம் வராது. தமிழர்களின் சொல்லுக்கு மரியாதையே இருக்காது! மார்ச் 5ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு நான் அழைப்பு விடுத்திருக்கிறேன்.அதில் கட்சிப் பாகுபாடு இல்லாமல் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.பிரதான எதிர்க்கட்சி அதிமுக கலந்து கொள்ளும் என்ற செய்தி வந்திருக்கிறது. மகிழ்ச்சி.
சிலர், கலந்து கொள்ள மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்வதெல்லாம், இன்றைக்கு பாஜகவை மகிழ்விக்க நீங்கள் செய்யும் சுயநல அரசியலால் தமிழ்நாட்டுக்குத் தீங்குதான் ஏற்படும். பா.ஜ.க.வை நம்பி சென்றவர்கள், அவர்களின் தேவை தீர்ந்தவுடனே மற்ற மாநிலங்களில் என்ன ஆனார்கள் என்று நீங்களே சிந்தித்துப் பாருங்கள். அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கும் பா.ஜ.க.வினருக்கும் சேர்த்து நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டுக்குத் துணையாக நில்லுங்கள்.
தயவு செய்து உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யாதீர்கள்! நாம் அனைவரும் ஓரணியில் இருக்கிறோம் என்று மற்ற மாநிலங்களுக்குக் காட்ட வேண்டும்! அதுமூலமாகத்தான் வர இருக்கும் ஆபத்த தடுத்து, நம்முடைய உரிமையை வென்றெடுக்க முடியும்! வென்றெடுத்தால்தான், எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும். நம்முடைய குழந்தைகளின் எதிர்காலத்துக்காக நாம் இதைச் செய்தே ஆக வேண்டும். இதில் தவறிவிட்டோம் என்றால், நமக்கான அடையாளமே இல்லாமல் போய்விடும். எனவே, நான் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்… நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒரே அணியில் இருப்போம்! தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்போம்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! இவ்வாறு அவர் பேசினார்.
* ‘பெயரில் மட்டுமே தர்மம் உள்ளது’
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் என்ன சொல்கிறார்? “தேசிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு ஏற்றுக் கொண்டால்தான் நிதி விடுவிக்கப்படும். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நிதி ஒதுக்கச் சட்டத்தில் இடமில்லை” என்று மிரட்டுகிறார். பெயர்தான் தர்மேந்திர பிரதான்! ஆனால், தருமமே உங்களிடம் இல்லையே” என்றார்.
The post தொகுதி மறு சீரமைப்பில் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என பிரதமரே எழுத்துப்பூர்வ உறுதி கொடுங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.