ஜூலை 28ஆம் நாள், டெல்லி நாளிதழில் ஒரு செய்தி வெளியானது. அது நாள்பட்ட பிரச்சினை ஒன்று மேலெழும்பக் காரணமாக அமைந்தது. டெல்லி நகரத் தெருக்களில் 10 லட்சம் நாய்கள் வசிக்கின்றன. அவற்றுள் ஒன்று, சாவி ஷர்மா என்னும் ஆறு வயதுச் சிறுமியைக் கடித்ததில், அந்தக் குழந்தை இறந்துபோனாள்.
உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் இந்தப் பிரச்சினையை ஒரு வழக்காக எடுத்துக்கொண்டு விசாரித்தனர். தலைநகரில் உள்ள நாய்களை எல்லாம் அப்புறப்படுத்திக் காப்பகத்தில் வைத்துப் பராமரிக்குமாறு ஆகஸ்ட் 11 அன்று மாநகராட்சிக்கு ஆணையிட்டனர். தெருநாய்களால் குழந்தைகளும் முதியோரும் ஊனமுற்றோரும் படும் இன்னல்களையும் சுட்டிக்காட்டினர்.