புதுடெல்லி: உச்ச நீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை விமர்சித்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே சமீபத்தில் கூறிய கருத்துக்கு எதிரான மனுவை அடுத்த வாரம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. நீதிமன்ற அமர்வு முன்பு வழக்கறிஞர் நரேந்திர மிஸ்ரா கூறுகையில், “நாட்டில் உள்நாட்டு போர் ஏற்பட்டால் அதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே பொறுப்பு என நிஷிகாந்த் துபே தெரிவித்திருந்தார். அவரின் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான கருத்துக்கள் பரப்பப்பட்டன. இது மிகவும் தீவிரமான விஷயம்.” என்றார்.