பந்தலூர்: தமிழ்நாட்டில் ஒரு மாவட்டம் முழுமையாக வனப்பகுதியில் இருக்கிறது என்றால், அது நீலகிரி மட்டுமே. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அற்புதமான பகுதியான நீலகிரி மாவட்டம், தேயிலை காடுகள் அதிகம் நிறைந்த குளுகுளு பகுதியாகவும், இயற்கையாகவே அமைந்த சுற்றுலா தலங்களை உள்ளடக்கியதாகவும் விளங்குகிறது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநில எல்லைகளில் வனப்பகுதியில் நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளதால் யானை, சிறுத்தை, புலி உட்பட பல்வேறு விலங்குகள் இருக்கின்றன. நீலகிரி மாவட்டத்தின் இயற்கை வளத்தை பாதுகாக்க, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு வளரக்கூடிய ஈட்டி, தேக்கு, அயனி வகை பலா மற்றும் பலா ஆகிய மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இருப்பினும், மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரிய வகை மரங்களை வெட்டிக் கடத்துவது தொடர் கதையாகி வருகிறது.