சென்னை: நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் தீவிரமாக உள்ளதால் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அநேக இடங்களிலும் இதர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. மேலும் தென்னிந்திய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் ஒரு இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்யக்கூடும். அதேபோல் கோவை, நெல்லை மாவட்டங்களில் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. அதேபோல் நாளை கோவை, நெல்லை, மாவட்டங்களின் மழைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்: கோவை உள்பட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் appeared first on Dinakaran.