நோயாளிகளுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு என்னென்ன சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்பதை முன்கூட்டியே கணிக்கும் வகையிலான ‘டிஜிட்டல் ட்வின்’ தொழில்நுட்பம் குறித்து சென்னை ஐஐடி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாக, அந்நிறுவனத்தின் பேராசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சேபியன்ஸ் ஹெல்த் பவுண்டேஷன் சார்பில் உலக சிறுநீரக தினத்தையொட்டி ‘சிறுநீரக நோயில் ஏஐ தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம், சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று நடைபெற்றது. சேபியன்ஸ் ஹெல்த் பவுண்டேஷன் தலைவர் ராஜன் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக நடிகர் சித்தார்த் கலந்துகொண்டு, உடலில் உப்பு அளவை குறைப்பதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய சேபியன்ஸ் கையேட்டினை வெளியிட்டார்.